35. இவள் கண் பசந்ததுவே!
35. இவள் கண் பசந்ததுவே! பாடியவர்: அம்மூவனார் இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 4-ன் உரையில் காணலாம். திணை: நெய்தல் துறை: மணமனைப் பிற்றைஞான்று புக்க தோழி நன்கு ஆற்றுவித்தாய் என்ற தலைமகற்குச் சொல்லியது. துறை விளக்கம்: திருமணத்திற்குப் பிறகு வீட்டிற்கு வந்த தோழியிடம், “களவுக் காதல் காலத்தில் நீ தலைவியை நன்றாக ஆறுதல் கூறித் தேற்றினாய்.” என்று தலைவன் கூறியதற்குத் தோழி அளித்த மறுமொழி. பாடலின் பின்னணி: தலைவனும் தலைவியும் முதலில் மறைவாகக் களவொழுக்கத்தில் காதலித்து, பின்னர் ஊரறிய மணம் முடித்து இல்வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்களின் புதிய வாழ்க்கையைக் காண வந்த தோழி, தலைவியின் மேனியில் ஏற்பட்ட மாற்றத்தையும், காதல் இன்பத்தின் மிகுதியால் கண்கள் பசலை நிறம் அடைந்ததையும் கண்டு மகிழ்ந்தாள். அதனைக் கண்ட தலைவன், "முன்பு நாம் மறைவாகக் காதலித்த காலத்தில் நான் பிரிந்திருந்தபோது நீதானே இவளைத் தேற்றி ஆறுதல் கூறினாய்? இப்போது நான் எப்போதும் இவளோடு இருப்பதால் உன் உதவி தேவையில்லை; அதனால்தான் இவள் கண்கள் நிறம்மாறித் தோன்றுகின்றன" என்று தோழியைப் புக...